கோப்புபடம் 
செய்திகள்

கோழி தீவனத்தை பரிசோதனைக்கு பிறகு பயன்படுத்த வேண்டும் - ஆராய்ச்சி நிலையம் தகவல்

கோழித்தீவனத்தில் நுண்ணுயிர் கிருமிகளை பரிசோதனை செய்து, அதன்பிறகு பயன்படுத்த வேண்டும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மாலை மலர்

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) முதல் 3 நாட்கள் நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அடுத்த 3 நாட்கள் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நாளை மற்றும் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மழைக்கு வாய்ப்பு இல்லை. 3-ந் தேதி 8 மி.மீட்டர் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

காற்று மணிக்கு 6 கி.மீ. வேகத்தில் வடகிழக்கு திசையில் இருந்து வீசும். வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 93.2 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 69.8 டிகிரியாகவும் இருக்கும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 75 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 50 சதவீதமாகவும் இருக்கும்.

சிறப்பு வானிலையை பொறுத்தவரையில் அடுத்த 3 நாட்கள் மாவட்டத்தின் சில இடங்களில் லேசான மழை எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய வானிலை கறவை மாடுகளில் மடிவீக்க நோயை உருவாக்கும் காரணிகளை அதிகப்படுத்தும் என்பதால், பால் கறப்பதற்கு முன்பும், பின்பும் 1 சதவீதம் பொட்டாசியம் பர்மாங்கனேட் கரைசலை கொண்டு மடியை கழுவ வேண்டும்.

கடந்த வாரம் கோழியின நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் ஆய்வு செய்யப்பட்ட இறந்த கோழிகள் பெரும்பாலும் இறக்கை அழுகல் நோயால் பாதிக்கப்பட்டு இறந்து இருப்பது தெரியவந்து உள்ளது. எனவே பண்ணையாளர்கள் கோழிகளுக்கு அளிக்கப்படும் தீவனத்தில் நுண்ணுயிர் கிருமிகளான கிளாஸ்டிரியம், ஸ்டெப்லோகாக்கஸ் மற்றும் ஈகோலை ஆகியவற்றின் தாக்கம் உள்ளதா? என பரிசோதனை செய்து, அதற்கு தகுந்தாற்போல் தீவன மேலாண்மை முறைகளை கையாள வேண்டும்.

மேலும் வடகிழக்கு பருவமழை காலம் நெருங்கி வருவதால், தீவன மூலப்பொருட்களில் பூஞ்சை நச்சுகளின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே தீவனத்தில் தகுந்த நச்சுதடுப்பு மருந்துகளை உபயோகிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.