செய்திகள்

நாமக்கல் காண்டிராக்டர் தற்கொலை வழக்கு: முன்னாள் அமைச்சர் பழனியப்பன் இன்று ஆஜராகவில்லை

நாமக்கலில் காண்டிராக்டர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் ஆஜராக சி.பி.சி.ஐ.டி போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால் அவர் இன்று ஆஜராகவில்லை.

மாலை மலர்

வருமான வரி சோதனை நடத்தியதால் நாமக்கல்லில் மோகனூர் ஆசிரியர் குடியிருப்பை சேர்ந்த சுப்பிரமணியன் (வயது 52) என்ற காண்டிராக்டர் தற்கொலை செய்து கொண்டார்.

கடந்த மே மாதம் 8-ந்தேதி நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள செவிட்டுரங்கன் பட்டியில் உள்ள தனது பண்ணை வீட்டில் அவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் ஒரு கடிதமும் எழுதி வைத்திருந்தார்.

அந்த கடிதத்தில் முன்னாள் அமைச்சரும், தற்போதைய பாப்பரெட்டிப்பட்டி தொகுதி எம்.எல்.ஏ.வுமான பழனியப்பன் பெயரை குறிப்பிட்டு இருந்தார்.

இந்த தற்கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகிறார்கள். கடந்த ஜூலை மாதம் 22-ந்தேதி நாமக்கல் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் பழனியப்பன் ஆஜரானார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.


இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு பழனியப்பனுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.

ஆனால் அவர் இன்று ஆஜராகவில்லை. சென்னையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாபொதுக்கூட்டத்தில் தினகரன் கலந்து கொள்கிறார். இதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக இருப்பதால் வேறு ஒரு நாளில் ஆஜராவதாக அவர் நாமக்கல் சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. சத்தியமூர்த்தியுடன் போனில் தொடர்பு கொண்டு தெரிவித்தார்.