ரேஷன் கடை, நாமக்கல் கலெக்டர் ஆய்வு, ஆசியா மரியம், அத்தியாவசிய பொருட்கள், namakkal collector , ration shop, Asia Mariam,
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாது காப்புத்துறையின் சார்பில் பொது வினியோகத் திட்டத்தின் கீழ் பொது மக்களுக்கு வழங்கப் படுகின்ற அத்தியாவசிய பொருட்கள் குறித்தும், ஸ்மார்ட் ரேஷன் கார்டுதாரர்கள் மாதந்தோறும் பொது வினியோகத்திட்ட பொருட்களை வாங்கி பயன்படுத்துவது குறித்தும் நாமக்கல் வட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு ரேஷன்கடைகளில் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
இதையொட்டி அவர் கொண்டிசெட்டிப்பட்டி, சந்தைப்பேட்டை புதூர், பெரியப்பட்டி, திருவள்ளுவர் காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் மண்எண்ணெய், அரிசி போன்ற அத்தியாவசிய பொருட்களின் இருப்பு குறித்தும், தரம் குறித்தும் ஆய்வு செய்தார். மேலும் பதிவேடுகளையும் ஆய்வு செய்து சரிபார்த்தார். அத்துடன் ரேஷன்கடைகளில் பொருட்கள் வாங்க வருகை தந்திருந்த பொதுமக்களிடம் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளுக்கு போதுமான அளவு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் முறையாக வழங்கப்படுகின்றதா ? என கேட்டறிந்தார். அதற்கு பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் முழுமையாக கிடைக்கின்றது என தெரிவித்தனர்.
மேலும் பொதுவினியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்ற அத்தியாவசிய பொருட்களை ரேஷன்கார்டு தாரர்களுக்கு தரமாகவும், எடையளவு குறையாமலும் தகுதியின் அடிப்படையில் முழுமையாக வழங்கிட வேண்டும் என கலெக்டர் விற்பனையாளர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட வழங்கல் அலுவலர் (பொறுப்பு) பாலச்சந்திரன், நாமக்கல் பறக்கும் படை துணை தாசில்தார் கதிர்வேல் ஆகியோர் உடன் இருந்தனர்.