தற்கொலை 
செய்திகள்

நாமகிரிப்பேட்டை அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

நாமகிரிப்பேட்டை அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமகிரிப்பேட்டை:

நாமகிரிப்பேட்டை அருகே உள்ள பிலிப்பாகுட்டை பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மகன் கிருஷ்ணன் (வயது 22). கூலித்தொழிலாளி. இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு பெற்றோர் செல்போன் ஒன்றை வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கிருஷ்ணன் சரியாக வேலைக்கு செல்லாமல் செல்போனில் நேரத்தை செலவு செய்து வந்ததாக தெரிகிறது.

இதனால் பெற்றோர் கிருஷ்ணனை வேலைக்கு செல்லுமாறு கண்டித்தனர். இதனால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

அவரை பெற்றோர் மற்றும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தம்மம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு உடல்நிலை மோசமானதால் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கிருஷ்ணன் நேற்று இறந்தார். இதுகுறித்து நாமகிரிப்பேட்டை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நானசேகரன் வழக்குப்பதிவு செய்து தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.