புதுடெல்லி:
ஆசிய கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய மகளிர் ஆக்கி அணிக்கு பிரதமர் மோடி மற்றும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஜப்பான் நாட்டில் 9-வது ஆசிய கோப்பை மகளிர் ஆக்கி போட்டி நடந்தது. நேற்று நடந்த இறுதிப் போட்டியில் ஷுட் அவுட் முறையில் 5 - 4 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.
இதன்மூலம் 2-வது முறையாக இந்தியா ஆசியக் கோப்பையை கைப்பற்றியுள்ளது. மேலும், இந்த வெற்றியின் மூலம் 2018-ம் ஆண்டு நடைபெற இருக்கும் உலகக் கோப்பை தொடருக்கும் இந்தியா தகுதி பெற்றுள்ளது.
இந்நிலையில் ஆசிய கோப்பை தொடரில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணிக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி டுவிட்டரில் கூறுகையில், இந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டத்தை வெற்றி பெற்றுள்ளது. அவர்களது சிறப்பான செயல்பாட்டால் ஆசிய கோப்பையை கைப்பற்ற முடிந்தது என பதிவிட்டுள்ளார்.
இதேபோல், ஆசிய கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய மகளிர் அணிக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். 13 ஆண்டுகளுக்கு பிறகு சீனாவை வீழ்த்தியது பாராட்டத்தக்கது என குறிப்பிட்டுள்ளார்.