செய்திகள்

மீண்டும் என் போன்ற மாணவர்களுக்கு தலைவராகி உள்ளார்: வெங்கையாவுக்கு எம்.பி. ராவத் பாராட்டு

பாராளுமன்றத்தின் மாநிலங்களவையில் சிவசேனா எம்.பி.யான சஞ்சய் ராவத் பேசும்போது, குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு மீண்டும் மாணவர் தலைவராகி உள்ளதாக பாராட்டு தெரிவித்துள்ளார்.

குடியரசு துணை தலைவராக வெங்கையா நாயுடு இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு பிரதமர் மோடி உள்பட முக்கிய பிரமுகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பாராளுமன்றத்தின் மாநிலங்களவை இன்று காலை கூடியது. மாநிலங்களவை தலைவராக வெங்கைய நாயுடு பொறுப்பு வகித்தார். அவருக்கு உறுப்பினர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில், சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் பேசுகையில், ‘வெங்கையா முதலில் மாணவர் தலைவராக இருந்தார். அதன்பின்னர், பா.ஜ.க.வில் மாணவர் அணி தலைவராக பொறுப்பேற்றார். அவர் மீண்டும் இந்த அவையில் உள்ள என் போன்ற மாணவர்களுக்கு தலைவராக வந்துள்ளார்.

ஆனால், இந்த மாணவர்கள் மிகவும் நல்லவர்கள். உங்களுக்கு எந்தவிதமான தொந்தரவும் கொடுக்க மாட்டார்கள் என உத்தரவாதம் அளிக்கிறேன். உங்களது ரத்த அழுத்தம் அதிகரிக்க நாங்கள் காரணமாக இருக்க மாட்டோம்’ என தெரிவித்தார்.