செய்திகள்

மகளிர் காங்கிரஸ் விழாவில் பாட்ஷா பாடல் பாடிய நக்மா

‘நீ நடந்தால் நடையழகு... நீ சிரித்தால் சிரிப்பழகு....’ என்று மகளிர் காங்கிரஸ் விழாவில் பாட்ஷா படத்தின் பாடலை நக்மா பாடினார்.

மாலை மலர்

புதுச்சேரி:

அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொது செயலாளர் நடிகை நக்மா கடந்த சில நாட்களாக புதுவையில் முகாமிட்டு கட்சியின் விழாக்களில் பங்கேற்று வருகிறார்.

புதுவை மகளிர் காங்கிரஸ் சார்பில் திருக்கனூர் சோரப்பட்டில் பெண்கள் விழிப்புணர்வு முகாம் மற்றும் நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவில் பங்கேற்ற நக்மா ஏழை பெண்களுக்கு நல திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

அப்போது நக்மா விழாவில் பங்கேற்ற பெண்களை உற்சாகப்படுத்தும் விதமாக காங்கிரஸ் நிர்வாகிகளை பாட்டு பாடும்படி கூறினார். இதனையடுத்து காங்கிரஸ் நிர்வாகிகள் பாட்டு பாடினர். இதன் பின்னர் நக்மாவை பாட்டு பாடும்படி காங்கிரஸ் நிர்வாகிகள் வற்புறுத்தினர்.

இதனை ஏற்று நக்மா மைக் பிடித்து ‘நீ நடந்தால் நடையழகு... நீ சிரித்தால் சிரிப்பழகு....’ ‘ஸ்டைலு ஸ்டைலுதான்...’, ‘தங்க மகன்...’ ஆகிய பாடல்களை பாடினார். அப்போது அங்கு கூடிருந்த பெண்கள் கூச்சலிட்டு ஆரவாரம் செய்தனர்.

இந்த பாடலில் நான் அழகு என்று கூறியது ராகுல் காந்தியை... ரஜினிகாந்தை பற்றி அல்ல. ராகுல்காந்தி தான் எங்கள் பாட்ஷா அவர் தான் பிரதமராக வேண்டும் என்று நக்மா விளக்கமும் கூறினார்.

விழாவில் மகிளா காங்கிரஸ் புதுவை மாநில தலைவி பிரேமலதா, துணைத்தலைவர் டாக்டர் விஜயகுமாரி, செயலாளர் துர்காதாஸ், பிரதேச காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் முத்தழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.