செய்திகள்

நாகாலாந்து சட்டசபையில் முதல்வர் லெய்சீட்சு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவில்லை

நாகாலாந்து சட்டசபையில் முதல்வர் லெய்சீட்சு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவில்லை. முதல்வர் வராததால் தேதி குறிப்பிடப்படாமல் அவை ஒத்தி வைக்கப்பட்டது.

மாலை மலர்

கோகிமா:

நாகலாந்தில் முதல்வர் லெய்சீட்சுவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ள முன்னாள் முதல்வர் ஜெலியாங் தனக்கு பெரும்பாலான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக கூறி, ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளார். அத்துடன், தனக்கு ஆதரவாக உள்ள எம்.எல்.ஏ.க்களை அழைத்துக் கொண்டு கவர்னரிடம் அணிவகுப்பும் நடத்தினார். 

இந்த அரசியல் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சட்டமன்றத்தில் முதலமைச்சர் லெய்சீட்சு வரும் ஜூலை 15-ம் தேதிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என கவர்னர் ஆச்சார்யா இரண்டு முறை உத்தரவிட்டார். ஆனால், இதற்கு மறுத்த அவர், இடைத்தேர்தலில் தான் போட்டியிடுவதால் அதற்கு வாய்ப்பு இல்லை என்றார். அத்துடன் கவர்னரின் உத்தரவுக்கு தடை விதிக்கக்கோரி கவுகாத்தி ஐகோர்ட்டின் கோகிமா அமர்வில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து, சிறப்பு கூட்டத்தொடரை கூட்டி இன்று காலை 9.30 மணிக்கு முதல்வர் லெய்சீட்சு-க்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும்படி கவர்னர் ஆச்சார்யா சபாநாயகருக்கு உத்தரவிட்டார்.  

இந்நிலையில், நாகாலாந்து சட்டசபையில் முதல்வர் லீசெட்சு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெறவில்லை. முதல்வர் வராததால் தேதி குறிப்பிடப்படாமல் அவை ஒத்தி வைக்கப்பட்டது.

60 உறுப்பினர்கள் கொண்ட நாகலாந்து சட்டமன்றத்தில் இப்போது 59 உறுப்பினர்கள் உள்ளனர். ஆளும் நாகா மக்கள் முன்னணியில் 47 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் முதலமைச்சருக்கு ஆதரவாக 12 உறுப்பினர்களே உள்ளனர். ஒரு சுயேட்சை எம்.எல்.ஏ.வும் ஆதரவு அளித்துள்ளார். மற்றவர்கள் அனைவரும் ஜெலியாங் பக்கம் உள்ளதால் அவரே முதல்வர் ஆவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.