லண்டன்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 2 முறை விம்பிள்டன் பட்டம் வென்றவரும், உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் 6-2, 6-3, 6-2 என்ற நேர்செட்டில் தரவரிசையில் 72-வது இடத்தில் உள்ள பிரான்ஸ் வீரர் சோங்காவை எளிதில் தோற்கடித்து 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ரோஜர் பெடரர், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த லூகாஸ் பவுல்லியை எதிர்கொண்டார்.
இதில் 7-5, 6-2, 7-6 (4) என்ற செட் கணக்கில் பெடரர் வெற்றி பெற்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார். இந்த வெற்றி ரோஜர் பெடரருக்கு
கிடைத்த 350வது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், உலக தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் ஜப்பான் வீரர் நிஷிகோரி 6-4, 6-3, 6-2 என்ற நேர்செட்டில் 71-ம் நிலை வீரரான அமெரிக்காவின் ஸ்டீவ் ஜான்சனை வீழ்த்தி 4-வது சுற்றுக்குள் நுழைந்தார்.