செய்திகள்

இந்தியாவுக்கு கள்ளத்தனமாக 490 கோடி டாலர் பணப் பரிமாற்றம் - பாக். முன்னாள் பிரதமர் மீது விசாரணை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப் இந்தியாவுக்கு கள்ளத்தனமாக 490 கோடி டாலர் பணப் பரிமாற்றம் செய்தது தொடர்பான விசாரணைக்கு பொறுப்புடைமை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #NAB #Nawaz #moneylaunderingtoIndia

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் பிரதமர் நவாஸ் ஷரிப் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக எழுந்த ‘பனாமா கேட்’ ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து அந்நாட்டின் மிகப்பெரிய நீதி அமைப்பான தேசிய பொறுப்புடைமை நீதிமன்றத்தின் விசாரணைக்கு கடந்த ஆண்டு மே மாதம் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

கூட்டு புலனாய்வுக் குழுவின் விசாரணை அறிக்கையை ஆய்வு செய்த உச்ச நீதிமன்றம், நவாஸ் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதாக கூறி, அவரை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, 28--7-2017 அன்று அவர் பதவியை விட்டு விலகினார். அவருக்கு எதிராக மூன்று ஊழல் வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், நவாஸ் ஷரிப் மற்றும் அவரை சேர்ந்தவர்கள் இந்தியாவுக்கு கள்ளத்தனமாக 490 கோடி டாலர் பணப் பரிமாற்றம் செய்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

இவ்விவகாரம், கடந்த 2016-ம் ஆண்டு வெளியான உலக வங்கி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஊடகங்கள் ஆதாரத்துடன் மேற்கோள் காட்டியுள்ளன. இந்த தொகை இந்திய நிதித்துறை அமைச்சகத்துக்கு கைமாறிய பிற்கு இந்தியாவின் அன்னியச் செலாவணி கையிருப்பு வெகுவாக உயர்ந்ததாகவும், பாகிஸ்தானின்அன்னியச் செலாவணி கையிருப்பு குறைந்துப் போனதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்த குற்றச்சாட்டு தொடர்பாக தனியாக புதிய விசாரணைக்கு பாகிஸ்தான் பொறுப்புடைமை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. #NAB #Nawaz  #moneylaunderingtoIndia