திண்டுக்கல்:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்க போவதாக திண்டுக்கல் நகர நாம் தமிழர் கட்சியினர் அறிவித்து இருந்தனர்.
அதன்படி அவர்கள் இன்று காலை பழனி சாலையில் ஒன்று திரண்டனர். பின்னர் அந்த கட்சியினர் ஊர்வலமாக வந்தனர். மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் பிரசன்னா தலைமை தாங்கினார். திண்டுக்கல் தொகுதி தலைவர் ஜெயசுந்தர், ஒன்றிய செயலாளர் தினேஷ், மாநகர செயலாளர் மகேஷ்வரன், ஒன்றிய தலைவர் சரவணன் உள்ளிட்ட 50 பேர் வந்தனர். இந்த கட்சியினர் மத்திய அரசின் நிறுவனமான பி.எஸ்.என்.எல். வாடிக்கை சேவை மையத்தில் மறியலுக்கு முயன்றனர்.
இதனை அறிந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். முன்னதாக அதே சாலையில் ரெடிமேடு ஆடையகம் திறப்பு விழாவுக்காக கேரள செண்டை மேளம் வாசிக்கப்பட்டு இருந்தது. இதனை அறிந்த நாம்தமிழர் கட்சியினர் திண்டுக்கல்லில் தமிழக பாரம்பரிய மேளம் தான் ஒலிக்க வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவித்து அவர்களை வெளியேற்றினர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.