சகுந்தலா - ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் செல்வம் 
செய்திகள்

திருவாரூர் அருகே மருந்து என்று கூறி தம்பதியிடம் வி‌ஷத்தை கொடுத்த ஆசாமி - மனைவி பலி

திருவாரூர் அருகே மருந்து என்று கூறி தம்பதியிடம் வி‌ஷத்தை கொடுத்த மர்ம நபரால் மனைவி பலியானார். கணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #Womankilled

திருவாரூர் அருகே உள்ள புலிவலம் விஷ்ணுதோப்பு பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 75). விவசாயி. இவரது மனைவி சகுந்தலா (65). இவர்களது மகன் முருகேசன். திருவாரூரில் கடை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் விஷ்ணுதோப்பில் உள்ள செல்வம் வீட்டுக்கு வந்தார். அப்போது வாடகைக்கு வீடு தேவைப்படுவதாகவும், தான் நாட்டு வைத்தியர் என்றும் கூறினார்.

அந்த நபர் கூறியதை உண்மை என்று நம்பிய செல்வம் தனக்கும் மனைவிக்கும் மூட்டு வலி இருப்பதாக கூறி அதற்கு மருந்து இருந்தால் கொடுக்கும் படி கேட்டார்.

இதையடுத்து அந்த நபர், செல்வத்திடம் வேப்பிலை, மஞ்சளை சேர்த்து அரைத்து வரும்படி கூறியுள்ளார். அவர்கள் அதனை கொண்டு வந்து கொடுத்ததும் அதில் தான் வைத்திருந்த ஒரு மருந்தை கலந்து கொடுத்துள்ளார். அதனை சாப்பிட்ட சிறிது நேரத்தில் கணவன்-மனைவி இருவரும் மயங்கி விட்டனர்.

இந்தநிலையில் வீடு திரும்பிய செல்வத்தின் மகன் முருகேசன் தனது பெற்றோர் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர்களது உடல்கள் வீங்கி போய் இருந்தன. இதனால் பயந்து போன அவர் தனது பெற்றோர்களை மீட்டு திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை சகுந்தலா பரிதாபமாக இறந்தார். செல்வம் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுபற்றிய புகாரின் பேரில் திருவாரூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து சகுந்தலாவிடம் நகை பறித்து சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர். மேலும் அவர் கொடுத்த நாட்டு மருந்தை சாப்பிட்டு சகுந்தலா பலியாகி விட்டதால் இது தொடர்பாகவும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.