செய்திகள்

மாரண்ட அள்ளி அருகே மர்ம காய்ச்சலுக்கு பிளஸ்-1 மாணவி பலி

மாரண்ட அள்ளி அருகே மர்ம காய்ச்சலுக்கு பிளஸ்-1 மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாலை மலர்

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் மாரண்ட அள்ளி அருகே உள்ள ஆல்மாரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மகள் கமலி (வயது 15). இவள் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தாள்.

இந்த நிலையில் மாணவி கமலிக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் கடந்த ஒரு வார காலமாக காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் குணம் அடையவில்லை. அப்போது டாக்டர்கள் கமலிக்கு மர்ம காய்ச்சல் தொற்றி இருப்பதாகவும், பெரிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படியும் கூறவே, பெற்றோர் உடனடியாக மகளை பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த மாணவி கமலி நேற்று இரவு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தாள்.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.