செய்திகள்

நாமகிரிபேட்டை அருகே மர்மக் காய்ச்சலுக்கு 8 மாத குழந்தை பலி

நாமகிரிபேட்டை அருகே மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 8 மாத குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்தது. இந்த சம்பவம் குடும்பத்தினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராசிபுரம்:

ராசிபுரம் தாலுகா, நாமகிரிபேட்டை அருகே உள்ள ஈஸ்வரமூர்த்தி பாளையத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 31). இவர் நாமகிரிபேட்டையில் உள்ள ஒரு டிராக்டர் பட்டறையில் மெக்கானிக் ஆக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ரேவதி (21). இவர்களது 8 மாத ஆண் குழந்தை அஜய்-க்கு கடந்த 3 நாட்களாக காய்ச்சல் இருந்து வந்துள்ளது.

இதற்காக அவர்கள் ராசிபுரம், சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தனர். காய்ச்சல் அதிகமாகவே கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நேற்று மாலையில் குழந்தையை சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி குழந்தை அஜய் இன்று விடியற்காலையில் பரிதாபமாக இறந்தது.

8 மாத ஆண் குழந்தை அஜய் காய்ச்சலால் இறந்த சம்பவம் குடும்பத்தினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. காய்ச்சலால் இறந்து போன குழந்தையை சொந்த ஊரான ஈஸ்வரமூர்த்தி பாளையத்திற்கு கொண்டு வருகின்றனர்.