செய்திகள்

தமிழக பட்ஜெட்டில் விவசாயிகளின் பயிர்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்- முத்தரசன்

விவசாயிகள் பெற்ற பயிர் கடன்களை தமிழக அரசு தள்ளுபடி செய்து பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

மாலை மலர்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் திருவாரூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி நதி நீர் பிரச்சனையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை ஏற்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு மறுத்து தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. தற்போது 6 வார காலத்துக்குள் மேலாண்மை வாரியத்தை அமைப்பதில் தாமதப்படுத்த முயற்சிக்கிறது.

அதேபோல் ஹைட்ரோ கார்பன், மீத்தேன், ஷேல் கியாஸ் திட்டங்களுக்கு மரக்காணம் முதல் வேளாங்கண்ணி வரையில் 24 இடங்களில் கச்சா எண்ணெய் எடுக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு டெண்டர் வழங்கியுள்ளது.

இந்த திட்டத்தின் மீது மக்கள் அச்சமும், பீதியும் அடைந்துள்ள நிலையில் பொதுமக்களின் கருத்தை அறியாமல் நன்மை, தீமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தாமல் அகங்காரமாக திட்டத்தை செயல்படுத்துவது ஏற்புடையதல்ல. இது மாநில அரசின் உரிமைகளை பறிக்கின்ற செயல்.

தமிழக அரசு தனது அதிகாரப்பூர்வ கருத்து என்ன என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். நியூட்ரினோ திட்டத்தை உறுதியாக எதிர்க்குமானால் தமிழக அரசின் நடவடிக்கைக்கு அரசியல் கட்சிகள் ஆதரவு அளிப்போம்.


ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் தான் உண்மை நிலையை முழுமையாக வெளியிட வேண்டும். புதிதாக அரசியலுக்கு வருபவர்கள் கருத்து கூற அச்சப்படுகின்றனர். தினகரன் தரப்புக்கு குக்கர் சின்னம் ஒதுக்கியிருப்பது குறித்து மேல்முறையீடு செய்துள்ளார். இதனால் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலக்கம் அடைந்துள்ளார்.

தமிழக பட்ஜெட்டை விவசாயிகள் உள்ளிட்ட பலரும் எதிர் நோக்கி உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக தமிழக விவசாயிகள் கடும் பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.

எனவே விவசாயிகள் பெற்ற பயிர் கடன்களை தமிழக அரசு தள்ளுபடி செய்து பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும்.