முத்தரசன் 
செய்திகள்

சட்டம்-ஒழுங்கை காக்க அரசு தவறிவிட்டது: முத்தரசன் குற்றச்சாட்டு

சட்டம்- ஒழுங்கை நிலைநாட்டி ஒவ்வொருவரின் உயிருக்கும் பாதுகாப்பு அளித்திட வேண்டிய பொறுப்பும், கடமையும் அரசுக்கு உண்டு என்று முத்தரசன் கூறியுள்ளார்.

மாலை மலர்

சென்னை:

இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நெல்லையில் தி.மு.க. முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருகசங்கர், பணிப்பெண் மாரி ஆகிய மூவரும் படுகொலை செய்யப்பட்டு, வீட்டில் உள்ள நகை மற்றும் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

சேலம் நங்கவள்ளியில், இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் ஜீவானந்தம் சகோதரர் வேலு தங்கமணி மீது கொலை வெறி தாக்குதல் நடைபெற்று உள்ளது. ஆணவ படுகொலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சட்டம்- ஒழுங்கை நிலைநாட்டி ஒவ்வொருவரின் உயிருக்கும் பாதுகாப்பு அளித்திட வேண்டிய பொறுப்பும், கடமையும் அரசுக்கு உண்டு.

ஆனால் முதல்-அமைச்சர் முந்தைய ஆட்சியிலும் நடைபெற்றது, தற்போதும் நடைபெற்று வருகின்றது என்று கூறுவது, அவர் வகிக்கும் உயரிய பொறுப்புக்கு உகந்ததா? எனவே சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி, பொது மக்களின் உயிருக்கும், உடமைகளுக்கும் உரிய பாதுகாப்பையும், அச்சமின்றி மக்கள் வாழ்வதற்கும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.