செய்திகள்

பிரதமர் மோடி, உ.பி. முதல் மந்திரி படத்தை வரைந்த மருமகள்: வீட்டை விட்டு துரத்திய கணவர் குடும்பத்தினர்

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பிரதமர் மோடி மற்றும் முதல் மந்திரி யோகியின் படத்தை வரைந்த பெண்ணை, அவரது கணவர் குடும்பத்தினர் வீட்டை விட்டுத் துரத்திய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

மாலை மலர்

லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பிரதமர் மோடி மற்றும் முதல் மந்திரி யோகியின் படத்தை வரைந்த பெண்ணை, அவரது கணவர் குடும்பத்தினர் வீட்டை விட்டுத் துரத்திய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பசாரிக்பூர் கிராமத்தை சேர்ந்தவர் நக்மா பர்வின். இவரது கணவர் பர்வேஸ் கான். இவர்களுக்கு சிக்கந்தர்பூர் காவல் நிலைய பகுதியில் கடந்த நவம்பரில் கல்யாணம் நடந்தது.

இந்நிலையில், நக்மா பர்வினை அவரது கணவர் குடும்பத்தினர் சரமாரியாக தாக்கியதுடன் வீட்டை விட்டும் துரத்தினர். இதனால் அவர் தனது தாய் வீட்டுக்கு சென்றார்.

இதுகுறித்து பர்வினின் தந்தை உள்ளூர் போலீசில் புகார் அளித்தார். அதில், தனது மகள் பிரதமர் மோடி மற்றும் உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் படங்களை வரைந்தார். இதைக்கண்ட கணவர் வீட்டார் அவரை வீட்டை விட்டு துரத்தி விட்டனர் என குறிப்பிட்டிருந்தார்.

ஆனாலும் இந்தக் குற்றச்சாட்டை பர்வின் கணவர் குடும்பத்தினர் மறுத்துள்ளனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.