செய்திகள்

லாரிகள் மோதி தீ விபத்து: உயிருக்கு போராடிய இந்தியரை புர்க்காவால் காப்பாற்றிய அரபு மங்கை

ஐக்கிய அரபு அமீரக நெடுஞ்சாலையில் இரு லாரிகள் மோதிய விபத்தில் உயிருக்கு போராடிய இந்திய டிரைவரின் உடலில் பற்றிய தீயை அரபு நாட்டு பெண் புர்க்காவால் அணைத்து காப்பாற்றியுள்ளார்.

மாலை மலர்

ஐக்கிய அரபு அமீரகத்தின் கடைக்கோடியில் உள்ள நகரமான ரஸ் அல்-கைமாஹ் பகுதியை சேர்ந்த ஜவஹர் சைப் அல் குமைட்டி(22 என்ற பெண் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது உறவினரை சந்தித்து நலம் விசாரித்துவிட்டு காரில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

நெடுஞ்சாலை வழியாக வந்தபோது இரு லாரிகள் நேருக்குநேர் மோதி தீபிடித்து எரிந்து கொண்டிருப்பதை ஜவஹர் கண்டார். லாரியின் அருகில் இருந்து உடலில் தீப்பற்றியவாறு ஒருவர் ஓடி வருவதை கண்ட அவர் பதைபதைத்தார். அவ்வழியாக சென்ற அனைவரும் வாகனங்களில் இருந்து கீழே இறங்கி வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர்.

தீக்காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த டிரைவரின் உயிரை காப்பாற்ற யாருமே முன்வரவில்லை. உடனடியாக தனது காருக்கு ஓடிய ஜவஹர் உள்ளே இருந்த பெண்மணியிடம் உங்கள் புர்க்காவை கழற்றி கொடுத்துவிட்டு காருக்குள்ளேயே இருங்கள் என்று கூறிவிட்டு, அவரது புர்க்காவை வாங்கிகொண்டு சாலைக்கு ஓடினார்.

உடலில் தீப்பற்றியவாறு கீழே புரண்டு கதறிய டிரைவரின் மீது புர்க்காவால் அடித்து தீயை கட்டுப்படுத்தியதுடன், அவரது உடலை புர்க்காவால் மூடி காப்பாற்றினார். சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் அந்த டிரைவரை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் சென்றனர். மற்றொரு லாரியின் டிரைவரும் தீக்காயங்களுடன் கொண்டு செல்லப்பட்டார்.

ஜவஹர் சைப் அல் குமைட்டியால் காப்பாற்றப்பட்ட டிரைவர் இந்தியாவை சேர்ந்த ஹக்கிரித் சிங் என்பது தெரியவந்துள்ள நிலையில், உரிய நேரத்தில் சமயோஜிதமாக ஜவஹர் தீயை அணைத்ததால் அவரது உயிருக்கு ஆபத்து இல்லை. 50 சதவீதத்துக்கு மிகாத அளவில் தீக்காயங்கள் உள்ளதால் அவரை காப்பாற்றி விடலாம் என்று தெரிவித்த டாக்டர்கள் ஜவஹரின் மனிதநேயத்தையும், துணிச்சலையும் வெகுவாக பாராட்டினர்.