செய்திகள்

ஆசியான் மாநாட்டில் ராமாயணம் இசை நாடகத்துக்கு சிறப்பான வரவேற்பு

பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று தொடங்கிய ஆசியான் உச்சி மாநாட்டில் நடைபெற்ற ராமாயணம் இசை நாடகத்துக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது.

மாலை மலர்

‘ஆசியான்’ எனப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் உச்சி மாநாடு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இன்று தொடங்கியது. பிலிப்பைன்ஸ் நாட்டு மக்கள் ‘மஹாராடியா லாவணா’ (ராவண மகாராஜா) என்ற பெயரில் ஒரு ராமாயண வடிவத்தை இதிகாசமாக போற்றி வருகின்றனர்.

இந்த இதிகாசத்தின் ராமரின் கதையை மையமாக வைத்து பிலிப்பைன்ஸ் நாட்டின் மிகப்பிரபலமான நடனமான ‘சிங்கில்’ நடனத்துடன் ராமாயண கதை நாட்டிய வடிவிலான இசை நாடகமாக அங்கு நடத்தப்படுவது வழக்கம்.

ஆசியான் மாநாட்டின் தொடக்க விழாவில் இன்று அந்நாட்டின் ராமாயண இசை நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நாடகத்தை பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனப் பிரதமர் ஷின்சோ அபே, ஜப்பான் அதிபர் லி கெக்கியாங் உள்ளிட்டோர் கண்டு களித்தனர்.

இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள பிரதமர் மோடி, அந்த இசை நாடகத்தில் பங்கேற்ற கலைஞர்களை வெகுவாக பாராட்டியுள்ளார். இந்நிகழ்ச்சியில் ராமாயணத்தில் வரும் பல்வேறு பகுதிகள் வெகு நேர்த்தியாக சித்தரிக்கப்பட்டதாகவும் தெரிவித்த அவர், இந்தியா-பிலிப்பைன்ஸ் இருநாடுகளுக்கு இடையிலான ஆழ்ந்த வரலாற்று பிணைப்பையும், பாரம்பரிய பெருமையையும் பறைசாற்றுவதாக குறிப்பிட்டுள்ளார்.