புதுச்சேரி:
புதுவை நைனார் மண்டபம் சுதானாநகர் வசந்தம் வீதியை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவரது மகன்கள் கார்த்திகேயன் (வயது30), திருமுருகன் (20) இவர்கள் இருவரும் நேற்று இரவு முருங்கப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே நடந்து சென்று கொண்டு இருந்தனர்.
அப்போது அங்கு குடிபோதையில் நின்றிருந்த ஒரு வாலிபர் கையில் வைத்திருந்த காலி பீர்பாட்டிலை கார்த்திக்கேயன் மீது வீசினார். இதனை கார்த்திக்கேயன் தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் பீர்பாட்டிலை எடுத்து கார்த்திக்கேயன் தலையில் குத்தினார். மேலும் இதனை தடுக்க முயன்ற திருமுருகனையும் அவர் பீர்பாட்டிலால் கையில் குத்தினார்.
இதில் காயம் அடைந்த கார்த்திக்கேயன் திருமுருகன் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து அவரது தந்தை கல்யாணசுந்தரம் முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரபத்திரசாமி வழக்குபதிவு செய்து அண்ணன்-தம்பியை பீர்பாட்டிலால் குத்திய வாலிபரை தேடிவருகிறார்.