முரளிதரராவ் 
செய்திகள்

தமிழக பா.ஜனதாவுக்கு 15 நாளில் புதிய தலைவர் - முரளிதரராவ் தகவல்

தமிழக பாரதிய ஜனதாவின் புதிய தலைவரை 15 நாளில் அறிவிக்கப்பட உள்ளதாக தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

புதுடெல்லி:

பா.ஜனதா கட்சியின் தமிழக தலைவராக இருந்த டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், தெலுங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டார். இதனால் தமிழக பா.ஜனதா தலைவர் பதவி காலியாக உள்ளது. இதைத்தொடர்ந்து தமிழக பா.ஜனதாவின் புதிய தலைவர் யார்? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் பா.ஜனதாவின் தேசிய பொதுச்செயலாரும், தமிழக பொறுப்பாளருமான முரளிதரராவ் தமிழக செய்தியாளர்களிடம் பேசியதாவது:-

பா.ஜனதாவில் சேரும்படி நடிகர் ரஜினிகாந்தை நாங்கள் அழைக்கவில்லை. எனவே, எங்கள் அழைப்பை அவர் நிராகரித்தார் என்று சொல்வதற்கு இடமில்லை. பா.ஜனதாவில் சேர அவர் விருப்பம் தெரிவித்தால் வரவேற்கிறோம். தமிழக பா.ஜனதாவின் புதிய தலைவரை 2 மாதங்களில் நியமிக்க வேண்டும் என்று நினைத்துள்ளோம். ஆனால் 10 அல்லது 15 நாட்களில்கூட அறிவிக்கப்படலாம். நிச்சயமாக சாதி அடிப்படையில் தலைவர் தேர்வு இருக்காது.

கட்சியின் உட்கட்டமைப்பை மேம்படுத்தி 6 மாதங்களில் தமிழகத்தில் பா.ஜனதாவை வலுப்படுத்துவோம். காஷ்மீர் விவகாரம் குறித்து தமிழகம் முழுவதும் நாடாளுமன்ற தொகுதிகள் வாரியாக பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும். மக்கள் செல்வாக்கு பெற்ற முக்கியமான தலைவர்களிடமும் விளக்கம் அளிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.