தமிழக பா.ஜனதா கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயம் தியாகராயநகர் வைத்தியராமன் தெருவில் உள்ளது.
இந்த அலுவலகத்துக்கு மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பெயரில் வெடிமருந்து நிரப்பிய கடிதம் வந்தது. இது தொடர்பாக மாம்பலம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் அந்த கடிதத்தை கைப்பற்றி வெடிமருந்தை வெளியே கொட்டினர். சென்னை எழும்பூரில் இருந்தே கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
எழும்பூர் வேனல்ஸ் ரோட்டில் உள்ள இம்பிரீயல் காம்ப்ளக்ஸ் பகுதியில் இருந்து வசூது என்பவர் இந்த கடிதத்தை அனுப்பியது போல அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மிரட்டல் கடிதத்தில் போன் நம்பர் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த நம்பரில் தொடர்பு கொண்டு போலீசார் பேசினர். அப்போது எதிர்முனையில் பேசியவரிடம் அவரது முகவரியை போலீசார் கேட்டனர். அப்போது மிரட்டல் கடிதத்தில் இருக்கும் முகவரியையே அந்த நபர் சொன்னார்.
எனது பெயரில் யாரோ இதுபோன்று அடிக்கடி மிரட்டல் கடிதத்தை அனுப்பி வருகிறார்கள் என்றும், தான் இந்த கடிதத்தை அனுப்பவில்லை என்றும் தெரிவித்தார். இருப்பினும் போலீசார் அவரிடம் தீவிரமாக விசாரித்தனர். அப்போது மிரட்டல் விடுத்தது அந்த நபர் இல்லை என்பது உறுதியானது. இதையடுத்து வெடிமருந்து பார்சலை அனுப்பியவரை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
தமிழிசை சவுந்தரராஜனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு போனில் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து வீட்டு முகவரிக்கு வெடிமருந்து பார்சலும் அனுப்பப்பட்டது.
தற்போது 3-வது முறையாக பா.ஜனதா அலுவலகத்துக்கு வெடிமருந்து பார்சல் மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பா.ஜனதா அலுவலகத்துக்கு ஏற்கனவே போலீஸ் பாதுகாப்பு உண்டு. இப்போது மிரட்டல் காரணமாக பா.ஜனதா அலுவலகத்தில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். அலுவலகம் அமைந்துள்ள வைத்தியராமன் தெருவுக்குள் நுழையும் வழிகளில் தடுப்பு வேலிகள் அமைத்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சாலி கிராமத்தில் இருக்கும் டாக்டர் தமிழிசை வீட்டுக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பா.ஜனதா அலுவலகம் இருக்கும் இடம் மாம்பலம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்டதாகும். இது தொடர்பாக மாம்பலம் இன்ஸ்பெக்டர் பிரபு விசாரணை நடத்தி வருகிறார்.
டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனின் வீடு விருகம்பாக்கம் போலீஸ் நிலைய எல்லையில் உளளது. அவருக்கு போனில் மிரட்டல் விடுக்கப்பட்டது, வீட்டுக்கு வெடிமருந்து பார்சல் அனுப்பியது தொடர்பாக விருகம்பாக்கம் போலீசில் ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பாக இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தமிழிசையை போனில் மிரட்டியவர் யார் என்பது தெரிய வந்துள்ளது. மும்பையை சேர்ந்த வாலிபர் ஒருவர் அங்கிருந்தபடியே போனில் மிரட்டி உள்ளார். மும்பையில் தானே பகுதியில் வசித்து வரும் அந்த வாலிபரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அந்த வாலிபர் யார்? அவரது பின்னணி என்ன? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.