செய்திகள்

மும்பை தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளி பரூக் தக்லாவுக்கு போலீஸ் காவல் நீட்டிப்பு

துபாயில் கைது செய்யப்பட்ட தாவூத் இப்ராஹிம் கூட்டாளி பரூக் தக்லாவுக்கு மார்ச் 28-ம் தேதி வரை போலீஸ் காவலை நீட்டித்து மும்பை தடா கோர்ட் உத்தரவிட்டது. #FarooqTakla

மாலை மலர்

மும்பை:

மும்பையில் கடந்த 1993-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பில் நூற்றுக்கணக்கானவர்கள் பலியானார்கள். இதில் தேடப்படும் முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் தலைமறைவாக இருக்கிறார். குண்டு வெடிப்பில் தொடர்புடைய அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். 

தாவூத்தின் முக்கிய கூட்டாளியான பரூக்தக்லா துபாயில் பதுங்கியிருந்தார். இவருக்கு எதிராக இந்தியா ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்திருந்தது. 1995-ம் ஆண்டு இவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், துபாய் அரசு பரூக்தக்லாவை நாடு கடத்தியது.

டெல்லிக்கு வந்திறங்கிய அவரை கடந்த 8-ம் தேதி கைது செய்த போலீசார், மும்பை தடா கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதனை அடுத்து, அவரை போலீஸ் காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். காவல் முடிந்த நிலையில், தக்லா இன்று மீண்டும் தடா கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார்.

அப்போது, அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டியது உள்ளதால் காவலை நீட்டிக்க வேண்டும் என அரசுத்தரப்பில் கோரிக்கை விடப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி வரும் 28-ம் தேதி வரை தக்லாவின் போலீஸ் காவலை நீட்டித்து உத்தரவிட்டார். #FarooqTakla