இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த கடந்த ஆண்டு மார்ச் மாதம் திடீரென நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். சொந்த ஊர்களுக்கு நடந்தே செல்லும் அவலநிலை ஏற்பட்டது. இதில் பலர் சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் பசியால் உயிரிழந்தனர். அதன்பின் சிறப்பு ரெயில்கள் விட ஏற்பாடு செய்யப்பட்டு நிலைமை சரிசெய்யப்பட்டது.
தற்போது இந்தியாவில் 2-ம் கட்ட கொரோனா அலை உருவாகியுள்ளது. இதனால் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் முழு ஊரடங்கு விதிக்கப்படலாம் என்ற நிலை உள்ளது.
இதனால் வெளிமாநிலங்களில் இருந்து மகாராஷ்டிரா சென்று வேலைப்பார்த்து வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலம் செல்ல விரும்புகிறார்கள்.
இந்த நிலையில் இன்று குர்லாவில் உள்ள லோக்மன்யாக திலக் ரெயில் நிலையத்தில் திடீரென ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் திரண்டனர். இதனால் ஒருவித பீதி நிலவியது.
இதுகுறித்து மத்திய ரெயில்வேயின் சிபிஆர்ஓ தலைமை அதிகாரி கூறுகையில் ‘‘நாங்கள் வழக்கமான மற்றும் சிறப்பு ரெயில்கள் விடுவது குறித்து ஆலோசித்து வருகிறோம். கோடைக்காலத்தில் இதுபோன்ற கூட்டம் வருவது நடைமுறைதான். இதனால் பீதி அடைய வேண்டாம்.
இது வழக்கமான கூட்டம்தான். வழக்கமான ரெயில்களுக்கு இடையில், 106 கூடுதல் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. உறுதி செய்யப்பட்ட டிக்கெட் உள்ளவர்கள் மட்டும் ரெயில்களில் அனுமதிக்கப்படுவார்கள். தேவையில்லாத கூட்ட நெரிசலை தவிர்க்க 6 ரெயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுண்டர்கள் மூடப்பட்டுள்ளது’’ என்றார்.