பிரான்சிடமிருந்து ‘ரபேல்’ போர் விமானங்கள் வாங்குவதில் முறைகேடு நடந்ததாக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 20-ந்தேதி ராகுல் காந்தி ராஜஸ்தானில் பிரமாண்ட பேரணியை நடத்தினார். அப்போது பிரதமர் நரேந்திரமோடிக்கு எதிராக குற்றம் சாட்டி பேசினார்.
பேரணிக்கு சில நாட்களுக்கு பிறகு சில அறிக்கைகளை வலைத்தளங்களில் வெளியிட்டார். அதில் ‘மோடியை திருடர்களின் தளபதி’ என கூறி இருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜனதா கட்சியை சேர்ந்த மகேஷ் ஸ்ரீஸ்ரீமால் என்பவர் மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். மேலும் இது தொடர்பான ஆவணங்களை அவர் இணைத்திருந்தார்.