கேரளாவை சேர்ந்த 6 இளைஞர்கள் சமீபத்தில் மும்பை புறநகர் ரெயிலில் நேற்று மாலை பயணம் செய்துள்ளனர். அப்போது அவர்களில் ஒருவர் தன்னுடைய வாட்ஸ் ஆப் மூலமாக, தாங்கள் மும்பைக்கு வந்தடைந்துவிட்டதாக நண்பருக்கு தகவல் அனுப்பியுள்ளார்.
அதில் நாங்கள் மும்பைக்கு வந்துவிட்டோம் என்பதை ‘we are reached Bomb' என்று ஆங்கிலத்தில் டைப் செய்து அனுப்பியுள்ளனர்.
இதை கவனித்த பயணி ஒருவர், BOMBAYக்கு பதிலாக டைப் செய்யப்பட்டிருந்த ‘BOMB' என்ற வார்த்தையை வெடிகுண்டு என புரிந்துகொண்டுள்ளார். இதையடுத்து உடனே ரெயில்வே போலீசாரை தொடர்புகொண்ட அந்த நபர், சந்தேகத்திற்குரிய வகையில் உள்ள 6 இளைஞர்கள் வெடிகுண்டை பற்றி பேசிக்கொண்டிருப்பதாக புகார் கொடுத்துள்ளார்.
தகவல் அறிந்து வந்து 6 இளைஞர்களை கைது செய்த ரெயில்வே போலீசார், அவர்களை பயங்கரவாத தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
மாணவர்கள் வைத்திருந்த உடைமைகள் சோதிக்கப்பட்டதில் சந்தேகத்திற்குரிய எந்த பொருட்களும் போலீசாரிடம் சிக்கவில்லை.
இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் 6 இளைஞர்களும் ராஜ்பூரில் உள்ள ஒரு கோச்சிங் சென்டரில் உருது கற்றுக்கொள்வதற்காக கடந்த 1 மாதமாக ரெயிலில் பயணம் செய்து வருவது தெரியவந்துள்ளது.