செய்திகள்

முதுகுளத்தூர் அருகே கத்தி முனையில் பெண்ணிடம் நகை பறிப்பு

பெண்ணிடம் கத்தி முனையில் 7¼ பவுன் நகையினை பறித்துச் சென்றவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மாலை மலர்

ராமநாதபுரம்:

முதுகுளத்தூர் அருகே உள்ள தேரிருவேலி போலீஸ் சரகத்திற்குட்பட்ட கொடரேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் சேவியர் மேரி (வயது 44). இவர் வயலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் அங்கு வந்தார். அவர், சேவியர் மேரியை வழிமறித்து தான் பெரிய ரவுடி என்று கூறியதோடு, கத்தியை காட்டி மிரட்டினார்.

மேலும் சேவியர் மேரி அணிந்திருந்த 7¼ பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு அந்த வாலிபர் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி விட்டார்.

இந்த அதிர்ச்சியில் இருந்து மீண்ட சேவியர் மேரி, திருடன்....திருடன் என கூச்சலிட்டார். இதனை கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வருவதற்குள் நகை பறித்த வாலிபர் மாயமாக மறைந்து விட்டார்.

இதுகுறித்து தேரிருவேலி போலீசில் சேவியர் மேரி புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் இளவரசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.