ஊத்தங்கரை:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த கீழ்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி. விவசாயி. இவரும் அதேபகுதியைச் சேர்ந்த அவரது உறவினர் பார்த்திபன் என்பவரும் கீழ்குப்பத்தில் இருந்து ஊத்தங்கரைக்கு நேற்று மோட்டார் சைக்கிளில் சென்றனர். அப்போது அனுமந் தீர்த்தம் பகுதியில் உள்ள முனியப்பன் கோவில் அருகே சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று வேகமாக வந்து பழனிசாமி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட பழனிசாமி சம்பவம் இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். விபத்தில் உடன் சென்றவர் பலத்த காயம் அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து விபத்தில் சிக்கிய பார்த்திபனை மீட்டு ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த ஊத்தங்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் இறந்த பழனிசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து பழனிசாமியின் மனைவி சகுந்தலா போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வாகனத்தையும், அதன் டிரைவரையும் தேடி வருகின்றனர்.