செய்திகள்

திருப்பூரில் மோட்டார் சைக்கிள்–மொபட் மோதல்: தொழிலாளி பலி

திருப்பூரில் மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தொழிலாளி இறந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

அனுப்பர்பாளையம்:

திருப்பூர் போயம்பாளையத்தை அடுத்த மும்மூர்த்திநகர் பகுதியை சேர்ந்தவர் லெனின்ராஜ் (வயது 35). பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் கடந்த 15–ந்தேதி இரவு மோட்டார் சைக்கிளில் பி.என்.ரோட்டில் சென்று கொண்டிருந்தார். பாண்டியன்நகர் அருகே சென்ற போது அந்த வழியாக செட்டிபாளையம் தியாகி குமரன் காலனியை சேர்ந்த மரியராஜ் (36) என்பவர் ஓட்டி வந்த மொபட்டும், லெனின்ராஜ் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிளும் மோதி கொண்டன.

இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த லெனின்ராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லெனின்ராஜ் பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.