செய்திகள்

திருக்கனூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது மினி வேன் மோதல்: எம்.எல்.ஏ.வின் மைத்துனர் பலி

திருக்கனூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது மினி வேன் மோதியதில் எம்.எல்.ஏ.வின் மைத்துனர் பலியானார்.

மாலை மலர்

திருக்கனூர்:

திருக்கனூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஜெயராமன் கவுண்டர். பஸ் உரிமையாளர். இவரது மகன் குமரன் (வயது 46). இவர் மண்ணாடிப்பட்டு தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. டி.பி.ஆர். செல்வத்துக்கு மைத்துனர் ஆவார்.

திருக்கனுர் பகுதியில் விவசாயம் செய்து வந்த குமரன் தனது பிள்ளைகளின் படிப்பு வசதிக்காக வாணரப்பேட்டையில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

நேற்று இரவு குமரன் திருக்கனூரில் பெற்றோர் மற்றும் உறவினர்களை சந்தித்து பேசி விட்டு மோட்டார் சைக்கிளில் புதுவைக்கு திரும்பி கொண்டிருந்தார்.

வழுதாவூர்- குமராப் பாளையம் இடையே ஒரு வளைவில் திரும்பிய போது எதிரே வந்த மினி வேன் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே குமரன் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்து போனார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கண்டமங்கலம் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விபத்தில் பலியான குமரனுக்கு தேவசேனா என்ற மனைவியும், 2 மகன்கள் உள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது.