செய்திகள்

கெலமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி

கெலமங்கலம் அருகே நடந்து சென்ற விவசாயி மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மாலை மலர்

ராயக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் விருப்பாச்சி கோவில்தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது60). விவசாயியான இவர் நேற்றிரவு கெலமங்கலம் டவுனுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கெலமங்கலம்- தேன்கனிக்கோட்டை சாலையில் அமைந்துள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அருகே வந்த போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக சீனிவாசன் மீது மோதியது. 

இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்சில் ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சீனிவாசன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து கெலமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.