புதுச்சேரி:
புதுவை முத்தியால்பேட்டை விஸ்வநாதன் நகரை சேர்ந்தவர் குமார். இவரது மகன் பாவாடைராயன் (வயது24). தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலைபார்த்து வந்தார். இவரும் வில்லியனூர் கிருஷ்ணா நகரை சேர்ந்த நாகேஸ்வரன் (25), குயவர்பாளையம் ராஜசேகர், கணுவாய்ப்பேட்டை ராஜ்குமார் ஆகிய 4 பேரும் நண்பர்கள்.
இவர்கள் 4 பேரும் லாஸ்பேட்டை ஏர்ப்போர்ட் சாலையில் நேற்று மாலை மது அருந்தினர். பின்னர் டிபன் வாங்கி வருவதற்காக மோட்டார் சைக்கிள்களில் லாஸ்பேட்டை மெயின்ரோட்டுக்கு வந்தனர். அதன்பின்னர் டிபன் வாங்கி கொண்டு மீண்டும் ஏர்ப்போர்ட் மைதானத்தக்கு சென்று கொண்டிருந்தனர். ராஜசேகரும், ராஜ்குமாரும் மைதானத்திற்கு சென்றுவிட்ட நிலையில் வழியில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி பாவாடைராயனும், நாகேஸ்வரனும் சிறுநீர் கழித்தனர்.
பின்னர் அதிவேகமாக இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் மைதானத்துக்கு விரைந்த போது அங்குள்ள தடுப்பு கட்டையில் மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பாவாடைராயனும், நாகேஸ்வரனும் படுகாயம் அடைந்தனர்.
அவர்களை அங்கிருந்த காவலாளிகள் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே பாவாடைராயன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து நாகேஸ்வரனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து வடக்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வரதராஜன், சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.