தீக்குளிக்க முயன்ற தாய் மற்றும் மகள் 
செய்திகள்

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் தாய்-மகள் தீக்குளிக்க முயற்சி

வீட்டுமனை பட்டா வழங்காததை கண்டித்து தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் தாய்-மகள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாலை மலர்

தூத்துக்குடி:

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். மேலும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

திருச்செந்தூர் அருகே உள்ள பள்ளிபத்து பகுதியை சேர்ந்தவர் சோமு, விவசாயி. இவரது மனைவி மேரி. இவர்களுக்கு பவிசுதா என்ற மகள் உள்ளார். இவர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்திருந்தனர். அப்போது திடீரென மறைத்து வைத்திருந்த மண் எண்ணெயை மேரி மற்றும் பவிசுதா ஆகியோர் தங்களது உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இந்நிலையில் அங்கு பாதுகாப்பிற்கு நின்றிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். மேலும் போலீசார் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர்.

அவர்களது மனுவில் ‘நாங்கள் பள்ளிபத்து அருகே பல வருடங்களாக குடியிருந்து வருகிறோம். எங்களின் இந்த இடத்திற்கு திருச்செந்தூர் தாலுகா அலுவலகத்தில் இருந்து வீட்டுமனை பட்டா கேட்டோம். ஆனால் மாறாக அவர்கள் பட்டா தராமல் அலைக்கழிக்கின்றனர். மேலும் இதுகுறித்து பலமுறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என குறிப்பிட்டிருந்தனர்.

தாய்-மகள் தீக்குளிக்க முயன்றது குறித்து சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.