டெல்லி:
டெல்லியின் முன்னாள் முதல் மந்திரியும், முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியுமான சுஷ்மா சுவராஜ் மாரடைப்பால்
நேற்று இரவு காலமானார். இன்று காலை முதல் அவரது மறைவிற்கு பிரதமர் மோடி உள்பட பல அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர். மாநிலங்களவையிலும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதையடுத்து பிற்பகல் அவரது உடல் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பாஜக செயல் தலைவர் ஜேபி நட்டா மற்றும் பொதுமக்கள் பலரும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அவரது உடல் ராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்டு டெல்லி லோதி சாலையில் உள்ள மயானத்தில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. ஊர்வலத்தில் முக்கிய தலைவர்கள் கார்களும் பின் சென்றன. பின்பு துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் சுஷ்மா சுவராஜின் உடல் தகனம் செய்யப்பட்டது.
அங்கு நடைபெற்ற இறுதிச் சடங்குகளில் அவரது மகள் பன்சூரி சுவராஜ் , கணவர் சுவராஜ் கௌசல், பிரதமர் நரேந்திர
மோடி, துணை ஜனாதிபதி வெங்கைய்யா நாயுடு, பாஜக மூத்த தலைவர் அத்வானி, முக்கிய தலைவர்கள் மற்றும்
தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.