காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டும் முயற்சியில் கர்நாடகா அரசு தீவிரமாக ஈடுபட்டு உள்ளது. இதற்கான வரைவு திட்ட அறிக்கைக்கு மத்திய நீர் வள ஆணையம் ஒப்புதல் அளித்து இருந்தது.
மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்ற மக்களவையில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் நாள்தோறும் கோஷங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதேபோல் டெல்லி மேல் சபையிலும் அ.தி.மு.க., தி.மு.க. உறுப்பினர்கள் இந்த பிரச்சனையை கிளப்பி வந்தனர்.
பாராளுமன்றத்தில் கடந்த 2-ந்தேதி அ.தி.மு.க. எம்.பி.க்கள் மேகதாது பிரச்சனையை கிளப்பி அமளியில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து அ.தி.மு.க. எம்.பி.க்கள் 24 பேரை ‘சஸ்பெண்டு’ செய்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நடவடிக்கை எடுத்தார்.
இதேபோல் அதற்கு மறுநாள் அமளியில் ஈடுபட்ட மேலும் 7 அ.தி.மு.க. எம்.பி.க்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் பாராளுமன்ற மக்களவை இன்று கூடியதும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் மேகதாது பிரச்சனையை கிளப்பி முழக்கமிட்டனர்.
இதுவரை மக்களவையில் 34 அ.தி.மு.க. எம்.பி.க்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.