போச்சம்பள்ளி:
போச்சம்பள்ளி - சந்தூர் சாலையில் பட்டப்பகளில் துணிகரமாக கொள்ளை நடந்துள்ளது. அதேபகுதியை சேர்ந்த எல்.ஐ.சி. பெரியசாமி என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1.5 லட்சம் ரொக்கம் மற்றும் பீரோவை உடைத்து 7 சவரன் தங்கநகைகள் மற்றும் அசல் சான்றிதழ்களையும் கொள்ளையர்கள் கொள்ளையடித்துள்ளனர்.
இதேபோல் இவரது வீட்டின் அருகே உள்ள பாரதிமணி என்பவரது வீட்டின் பூட்டைஉடைத்து சுமார் 30 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துள்ளனர். பின்னர், ராமலிங்கம் என்பவரது வீட்டின் பூட்டையும் உடைத்து பார்த்துள்ளனர். அங்கு திருடக்கூடிய அளவில் பொருட்கள் இல்லாததால் திருடாமல் சென்றுள்ளனர்.
நேற்று இரவு போச்சம்பள்ளி அடுத்த மத்தூர் பகுதியில் அடுத்தடுத்த 4 கடைகளிலும், டாஸ்மாக் கடைகளிலும் சுமார் 2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் ரொக்கம் திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் போச்சம்பள்ளி குடியிருப்பு பகுதியிலும் திருட்டு சம்பவம் நடைபெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்தூர் பகுதியில் திருடப்பட்ட அனைத்து கடைகளின் பூட்டுகளை திருடர்கள் எடுத்து சென்றுள்ளனர்.
அதேபோல் போச்சம்பள்ளி பகுதியில் திருடப்பட்ட மூன்று வீடுகளின் பூட்டுகளையும் திருடர்கள் எடுத்து சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்தூர் பகுதியில் திருடிய நபர்களே போச்சம்பள்ளி பகுதியில் திருடியிருப்பார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.