செய்திகள்

பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறி விதவை பெண் தீக்குளிக்க முயற்சி

கணவர் இறந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறி கலெக்டர் அலுவலக வாசலில் அந்த பெண் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாலை மலர்

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த தொட்டிவலசு குடித்தெருவை சேர்ந்த விதவை பெண் லோகநாயகி இன்று நாமக்கல் கலெக்டர் அலுவலக வாசலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்து விசாரணைக்காக அழைத்து சென்றனர். அப்போது அவர் கூறியதாவது:-

என் கணவர் இறந்த பிறகு கணவரின் வீட்டில் வசித்து வருகிறேன். எனது மாமனார் மற்றும் உறவினர்கள் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார்கள். உறவுக்கார பெண்களும் என்னை கொன்று விடுவதாக மிரட்டுகிறார்கள்.

இது குறித்து போலீசில் புகார் கொடுத்தாலும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே உயிரை மாய்ப்பதை தவிர வேறு வழி இல்லை என்பதால் இன்று தீக்குளிக்க முயற்சி செய்தேன்

இவ்வாறு அவர் கூறினார்.