தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்துள்ள தாளநத்தம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி. இவர் அந்த பகுதி பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் புட்டிரெட்டிபட்டி பகுதியை சேர்ந்த பழனி மகன் அஜித் (21) என்பவருக்கும் அந்த மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அஜித் அந்த மாணவியிடம் நம்ம இரண்டு பேரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று ஆசை வார்த்தை கூறி அவரது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அந்த மாணவிக்கு சில நாட்கள் கழித்து வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த மாணவியின் தந்தை ராமியம்பட்டியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது அந்த மாணவி, அஜித் என்பவர் என்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி பாலியல் தொந்தரவு செய்துள்ளார் என்பதை தனது தந்தையிடம் கூறியுள்ளார்.
இது குறித்து மாணவியின் தந்தை கடத்தூர் போலீஸ் நிலையத்தில் அஜீத் மீது புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.