செய்திகள்

இந்து மதத்தை பற்றி அவதூறாக பேசவில்லை - மோகன் சி.லாசரஸ் வாட்ஸ்-அப் வீடியோவில் விளக்கம்

சென்னையில் இந்தியாவின் நம்பிக்கை, வேதம் என்ற தலைப்பில் கூட்டத்தில் பேசிய சில வார்த்தைகளை மட்டும் வைத்து திரித்து அதை வெளியிட்டுள்ளனர் என்று மோகன் சி.லாசரஸ் வாட்ஸ்-அப் வீடியோவில் விளக்கம் அளித்துள்ளார். #MohanCLazarus

மாலை மலர்

தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியை சேர்ந்த கிறிஸ்தவ மத போதகரான மோகன் சி.லாசரஸ் இயேசு விடுவிக்கிறார் என்ற பெயரில் கிறிஸ்தவ ஊழியம் செய்து வருகிறார். இவர் ஒரு கிறிஸ்தவ கூட்டத்தில் பேசிய வீடியோ காட்சி சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவியது. அதில் இந்து மதத்தை பற்றி அவதூறாக பேசியிருந்தார்.

இது தொடர்பாக அவர் பலர் கொடுத்த புகாரின் பேரில் அவர் மீது கோவை, பொள்ளாச்சி, நாசரேத், பாளை பெருமாள்புரம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் மோகன் சி.லாசரஸ் பேசிய வீடியோ ஒன்று வாட்ஸ்-அப்பில் பரவி வருகிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் இந்தியாவின் நம்பிக்கை, வேதம் என்ற தலைப்பில் கூட்டத்தில் பேசிய காட்சி அது. அதில் சில வார்த்தைகளை மட்டும் வைத்து திரித்து அதை வெளியிட்டுள்ளனர். எனது உடன் பிறந்த சகோதரர்களும் இந்து மதத்தில் உள்ளனர். அவர்களிடம் கூட நான் தவறுதலாக பேசவில்லை. என்னிடம் ஏராளமான இந்து மதத்தினர் பிரார்த்தனைக்காக வருகின்றனர்.

இவ்வாறு அதில் அவர் பேசியுள்ளார். #MohanCLazarus