செய்திகள்

பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ள ஒருங்கிணைந்து செயல்படவேண்டும்: ஷாங்காய் மாநாட்டில் மோடி பேச்சு

பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ள அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

மாலை மலர்

அஸ்தானா:

ரஷியா, சீனா, கிர்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் இணைந்து ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு என்ற கூட்டமைப்பை ஏற்படுத்தி உள்ளன. இந்த அமைப்பில் இந்தியா, பாகிஸ்தான், ஈரான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளுக்கு பார்வையாளர்கள் என்ற அந்தஸ்து வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு கஜகஸ்தான் நாட்டின் தலைநகரான அஸ்தானாவில் நேற்றும் இன்றும் நடைபெற்றது. இந்த மாநாட்டின்போது, இந்தியாவும், பாகிஸ்தானும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உறுப்பினர்களாக சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளன.

அதன்பின்னர் மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:

12 வருட ஆய்வுக்கு பின் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியாவிற்கு முன்னுரிமை அளித்து உறுப்பினராக சேர்த்துக் கொள்ளப்பட்டதற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். பயங்கரவாத பயிற்சி, ஆள் எடுத்தல், நிதியுதவி ஆகியவற்றிற்கு எதிராக, நாம் ஒருங்கிணைந்து செயல்படாவிட்டால், அதற்கு தீர்வு கிடைக்காது. பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றின் மீது தாக்கத்தை ஏற்படுத்தாமல் இணைப்பு திட்டங்கள் செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.