செய்திகள்

இஸ்ரேல் பயணத்தை நிறைவு செய்தார் பிரதமர் மோடி

இஸ்ரேல் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தனது 3 நாள் பயணத்தை நிறைவு செய்து ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்ள ஜெர்மன் புறப்பட்டு சென்றார்.

மாலை மலர்

இந்தியாவுக்கும், இஸ்ரேலுக்கும் தூதரக உறவு ஏற்பட்டு 25 ஆண்டுகள் ஆனதன் நினைவாக பிரதமர் மோடி கடந்த செவ்வாய்க்கிழமை இஸ்ரேல் நாட்டுக்கு சென்றார். இந்திய பிரதமர் இஸ்ரேல் நாட்டுக்கு செல்வது இதுவே முதல் முறை.

இஸ்ரேலுக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியை அந்நாட்டு பிரதமர் நேதன்யாஹு விமான நிலையத்தில் சம்பிரதாயங்களை மீறி வரவேற்றார். மோடிக்கு சிறப்பு விருந்தும் அளித்தார். இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

டெல் அவிவ் நகரில் உள்ள இந்தியர்கள் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். ஹைபா நகரில் உள்ள இந்திய கல்லறையில் இந்திய ராணுவ வீரர்களின் நினைவிடங்களில் மோடி அஞ்சலி செலுத்தினார்.

இந்நிலையில், தனது 3 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடியை, இஸ்ரேல் பிரதமர் நேதன்யாஹு விமான நிலையம் வந்து வழியனுப்பி வைத்தார். இதைதொடர்ந்து பிரதமர் மோடி, ஜி-20 மாநாட்டில் கலந்துகொள்ள ஜெர்மன் நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றார்.