ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் மாவட்டம் கேஷ்வானில் இருந்து கிஷ்த்வார் நோக்கி இன்று காலையில் ஒரு மினி பேருந்து சென்றுகொண்டிருந்தது. கிஷ்த்வாரை நெருங்கியபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, மலைப்பாதையில் உருண்டு பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
முதலில் 10 பேர் மட்டுமே இறந்ததாக தகவல் வெளியானது. பின்னர் உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தது. பிற்பகல் நிலவரப்படி 35 பேர் உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது. 17 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று ஜம்மு காஷ்மர் மாநில ஆளுநர் சத்ய பால் மாலிக் அறிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்களுக்கு உயர்தர சிகிச்சை வழங்கும்படி மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.