இந்தியாவின் சிறந்த ஹாக்கி வீரராக திகழ்ந்த தியான் சந்த்தைப் பெருமைப்படுத்தும் விதமாக அவரது பிறந்த நாளான ஆகஸ்ட் 29ம்(இன்று) தேதி ஒவ்வொரு ஆண்டும் தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்படுகிறது.
நாட்டு மக்களிடம் ஆரோக்கியமான வாழ்க்கையை ஊக்குவிப்பதே இந்த நாளின் முக்கிய நோக்கமாகும்.கடந்த 2012ம் ஆண்டு முதன்முறையாக ஆகஸ்ட் 29ம் தேதி தேசிய விளையாட்டு தினமாக அறிவிக்கப்பட்டது.
இந்நாளில் குடியரசு தலைவரால், விளையாட்டுகளில் சாதனைப் படைத்த வீரர்களுக்கு ராஜிவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா மற்றும் துரோணாச்சாரியார் போன்ற விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில் இன்று பிரதமர் மோடி, ‘Fit India' எனும் இயக்கத்தை துவக்கி வைத்தார். இதற்காக டெல்லியில் உள்ள இந்திரா காந்தி மைதானத்தில் விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த விழாவில் பாஜக தொண்டர்கள், நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த விழாவில் விளையாட்டின் முக்கியத்துவம், ஆரோக்கியத்திற்காக யோகா செய்யும் முறை உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இது குறித்து பிரதமர் மோடி உரையாற்றினார்.
இந்த விழாவில் சிலர் ஒரு குழுவாக அமர்ந்து யோகா உடற்பயிற்சியினை செய்தனர். இதில் மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜீ மற்றும் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி கலந்துக் கொண்டுள்ளார்.