பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் ஒன்றியம் எலவந்தி வடுகபாளையம், பொங்கலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தொட்டம்பட்டி கிராமம், திருப்பூர் மாநகராட்சியை சேர்ந்த இடுவம்பாளையம் ஆகிய இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. அதனை பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள அனைத்து தரப்பு மக்களும் ஆர்வமாக உள்ளனர். ஆனால் தற்போது தடுப்பூசி இருப்பு குறைவாக உள்ளதால் இருக்கின்ற தடுப்பூசியை கொண்டு மக்களுக்கு மருத்துவர்கள் செலுத்தி வருகின்றனர். மக்களின் தேவைக்கேற்ப தடுப்பூசி வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார்.
ஆய்வின் போது பொங்கலூர் வட்டார மருத்துவ அலுவலர் சுந்தரவேல், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வரதராஜன், சுகாதார ஆய்வாளர் கந்தசாமி, எலவந்தி வடுகபாளையம் ஊராட்சித்தலைவர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.