செய்திகள்

கோவாவில் முதலமைச்சர் மனோகர் பாரிக்கருக்காக பனாஜி தொகுதி எம்.எல்.ஏ. ராஜினாமா

கோவா மாநிலத்தில் முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் போட்டியிடுவதற்கு வசதியாக பனாஜி தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கோவா மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 17 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக இருந்தது. ஆனால், 13 இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜ.க., சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்தது. பாதுகாப்பு துறை மந்திரியாக இருந்த மனோகர் பாரிக்கர் முதல் மந்திரியாக தேர்வு செய்யப்பட்டு கடந்த மார்ச் 14-ம் தேதி பதவியேற்றார்.

பதவியேற்ற 6 மாதத்திற்குள் அவர் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். எனவே, அதற்கு வசதியாக பனாஜி தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. சித்தார்த் குன்கலியேங்கர் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் பிரமோத் சாவந்திடம் வழங்கினார்.

பாரிக்கர் மத்திய மந்திரியாக பதவி உயர்வு பெற்றபிறகு, 2015-ம் ஆண்டு அவரது பனாஜி தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் குன்கலியேங்கர் போட்டியிட்டு முதல் முறையாக எம்.எல்.ஏ. ஆனார். அதன்பின்னர், இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலில் மீண்டும் பனாஜி தொகுதியில் போட்டியிட்டு, ஐக்கிய கோன்ஸ் கட்சி வேட்பாளர் அதனாசியோவை தோற்கடித்து வெற்றி பெற்றார்.