சென்னை:
ஒக்கி புயலில் சிக்கி மாயமான மீனவர் பிரச்சினையில் தமிழக அரசின் மெத்தன போக்கை கண்டித்து சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு தி.மு.க. மீனவர் அணி சார்பில் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மு.க ஸ்டாலின் பேசியதவது:
ஒகி புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டத்தின் 30 கிராமங்களுக்கு சென்று பார்த்தேன். மீனவர்களை பாதுகாக்க திமுக ஆட்சியில் கம்பியில்லா தொலை தொடர்பு சாதனம் வழங்கப்பட்டது, தற்போது அந்த திட்டத்தை செயல்படுத்தவில்லை. மீனவர் பிரச்சனை தொடர்பாக நாளை ஆளுநரை சந்திக்க அனுமதி கிடைத்துள்ளது. பேரிடரை சமாளிக்க முடியாத அரசாக தமிழக அரசு உள்ளது.
மீனவர்கள் பாதிக்கப்பட்டபோது முதலமைச்சர் நேரில் சென்று சந்திக்கவில்லை. இன்று அவர் கன்னியாகுமரிக்கு சென்றுள்ளது காலம்தாழ்ந்த நடவடிக்கை. மீனவ குடும்பங்களுக்கு கூடுதல் நிதி, புயல் பாதிப்புகளை உடனடியாக சீரமைக்க மத்திய மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
இவ்வாறு அவர் பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, திமுக துணை பொதுச்செயலாளர் துரை முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.