முக ஸ்டாலின் 
செய்திகள்

சர்வாதிகார முறையில் தேர்தல் நடத்த முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது - முக ஸ்டாலின்

மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கன அவசர சட்டத்தை பிறப்பித்தது கண்டிக்கத்தக்கது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை:

தமிழக அமைச்சரவை கூட்டம் தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்தப்படுவது குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அதில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் மூலம், மேயர் தேர்வு செய்யப்படுவர் என தமிழக அரசு தெரிவித்திருந்தது.

தமிழக அரசின் இந்த முடிவுக்கு தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இதற்கிடையே, மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான அவசர சட்டத்தை தமிழக அரசு இன்று பிறப்பித்துள்ளது. இந்த சட்டத்துக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார். 

இந்நிலையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: 

மறைமுகமாக தேர்தல் நடத்துவதன் மூலம் சர்வாதிகார முறையில் தேர்தல் நடத்த முயற்சி நடக்கிறது. தி.மு.க., ஆட்சியில் அரசியல் சூழ்நிலை காரணமாக மறைமுகமாக உள்ளாட்சி தேர்தல் நடத்தினோம். உள்ளாட்சியில் உறுப்பினர்கள் சுதந்திரமாக செயல்பட முடியாது என்பதனால் மறைமுகமாக தேர்தல் முறை மாற்றப்பட்டது.

மறைமுக தேர்தல் நடத்துவதற்கு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது கண்டிக்கத்தக்கது. மறைமுக தேர்தல் குறித்து அமைச்சரவையில் பேசவில்லை என ஓ.பி.எஸ் கூறினார். ஓ.பி.எஸ் கூறியதற்கு மாறாக மறைமுக தேர்தலுக்கான அவசர சட்டம் பிறப்பிக்கபப்ட்டுள்ளது என தெரிவித்தார்.