செய்திகள்

2ஜி விவகாரத்தில் தி.மு.க. எந்த தவறும் செய்யவில்லை என்பது நிரூபணம்: மு.க.ஸ்டாலின் கருத்து

2ஜி விவகாரத்தில் தி.மு.க. எந்த தவறும் செய்யவில்லை என்பது நிரூபணம் ஆகியிருப்பதாக சி.பி.ஐ. நீதிமன்ற தீர்ப்பு குறித்து மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

சென்னை:

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. இதில், குற்றம்சாட்டப்பட்ட ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து தீதிபதி ஓ.பி.ஷைனி உத்தரவிட்டார். 

குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க சி.பி.ஐ. தவறிவிட்டதாக நீதிபதி தெரிவித்தார். குற்றச்சாட்டை நிரூபிக்க போதிய ஆவணங்களை சி.பி.ஐ. தரப்பு தாக்கல் செய்யப்படாததால், அனைவரும் விடுதலை செய்யப்படுவதாகவும் அவர் கூறினார். இந்த தீர்ப்பை தி.மு.க.வினர் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர். 

தீர்ப்பு வழங்கியதும் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார். தி.மு.க.வை அழிக்க வேண்டும் என திட்டமிட்டு 2ஜி வழக்கு தொடரப்பட்டது  என்றும், நீதிமன்ற தீர்ப்பில் இருந்து தி.மு.க. எந்த தவறும் செய்யவில்லை என நிரூபணம் ஆகியிருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது, இனி தி.மு.க.விற்கு அனைத்தும் வெற்றி தான் என்றும், தவறான அரசியல் உள்நோக்கத்துடன் தொடங்கப்பட்ட வழக்கில் நியாயம் வென்றுள்ளது என்றும் துரைமுருகன் தெரிவித்தார். 2ஜி வழக்கை அரசியல் செய்தவர்களுக்கு இந்த தீர்ப்பு ஒரு பாடம் என முன்னாள் அமைச்சர் பொன்முடி கூறினார். 

நீதிமன்ற தீர்ப்பு தி.மு.க.விற்கு மேலும் பலத்தை அதிகரிக்கும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார். நீதிமன்றத்தின் தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை என்பது நிரூபணம் ஆகி உள்ளது என ப.சிதம்பரம் கூறினார்.

நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருக்கிறார். அதேசமயம், ஊழல், லஞ்சத்தை ஒழிக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 2ஜி வழக்கில் அனைவரும் விடுவிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.