லக்னோ:
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் அதற்கான தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி, முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 22-ம் தேதி நடைபெற்றது.
இந்நிலையில், 25 மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. தலைநகர் லக்னோவில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். இந்நிலையில், பல்வேறு வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்போட வந்த மக்களில் பலரது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அவர்களை அனுமதிக்கவில்லை. இதனால், பரபரப்பான சூழ்நிலை அங்கு நிலவியது.
முன்னாள் மத்திய மந்திரி கல்ராஜ் மிஸ்ராவின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அவரை வாக்களிக்க அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இதனால், அவர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட போது அவரது வேட்புமனுவை முன்மொழிந்த வீர்பத்ரா நிஷாத் என்பவரின் பெயர் பட்டியலில் இல்லாததால் அவர் வாக்களிக்க அனுமதிக்கவில்லை. இதேபோல, முன்னாள் தேர்தல் ஆணையர் கிருஷ்ண மூர்த்தியின் பெயரும் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
முதற்கட்ட தேர்தலின் போது சில வாக்குச்சாவடிகளில் எந்த பொத்தானை அழுத்தினாலும் பா.ஜ.க.வுக்கு ஓட்டு விழுந்தது என்ற சர்ச்சை எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.