புதுடெல்லி:
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கடந்த 8-ம் தேதி காணாமல் போன மாணவர், இன்று பத்திரமாக வீடு திரும்பினார்.
டெல்லியில் உள்ள இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் வாழ்க்கை அறிவியலுக்கான முனைவர் பட்டப்படிப்பு படித்து வருபவர் முகுல் ஜெயின் (29).
இவர் கடந்த 8-ம் தேதி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தனது படிப்பு தொடர்பான ஆசிரியரை பார்க்க சென்றார். அன்று முதல் அவரை காணவில்லை. பல்கலைக்கழக வளாகத்திலிருந்து வெளியே செல்வது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முகுலை தேடி வந்தனர்.
இந்நிலையில், மாயமான பல்கலைக்கழக மாணவர் முகுல் காசியாபாத்தில் உள்ள அவரது வீட்டுக்கு இன்று பத்திரமாக திரும்பினார். அவரிடம் நடத்திய விசாரணையில், பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள கங்கை ஆற்றில் சென்று தீர்த்தமாடியதாக தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்து வந்த நஜீப் அகமது என்ற மாணவர், கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் 15-ம் தேதி காணாமல் போயுள்ளார். இந்த வழக்கு சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டும், நஜீப் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.